கழிவுப் பஞ்சுவிலை உயர்வால் நூல் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக கவலை தெரிவிக்கும் ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் கழிவு பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நூற்பாலைகளில் இருந்து பெறப்படும் கோம்பர் காட்டன் எனப்படும் கழிவுப் பஞ்சு கொண்டு ஓபன் எர்ன் ஸ்பின்னிங் மில்களில் கிரே காட்டன் நூல்கள் மற்றும் கலர் நூல்கள் தயாரிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் மட்டுமே 600-க்கு மேற்பட்ட ஓபன் எர்ன் மில்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் நடப்பாண்டில் கழிவுப் பஞ்சின் விலை இதுவரை அளவில் 100% அதிகரித்திருப்பதாக மில் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த மாதத்தில் கிலோ 120 ரூபாய்க்கு விற்ற கழிவுப் பஞ்சு தற்போது 165 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் கழிவுப் பஞ்சு கொண்டு நூல் தயாரிக்கும் ஓபன் எர்ன் ஸ்பின்னிங் மில்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி வருவதாக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஓபன் எர்ன் ஸ்பின்னிங் மில்கள் நம்பியிருக்கும் 6 லட்சம் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு கழிவுப் பஞ்சின் விலையை கட்டுப்படுத்துமாறு உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் உள்நாட்டிலேயே கழிவுப் பஞ்சுக்கு தட்டுப்பாடு இருப்பதால் அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடைவிதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Tags:
#கழிவுப் பஞ்சு
# விலை உயர்வு
# ஸ்பின்னிங் மில்
# நூல் உற்பத்தி